மகாபுஷ்கரத்தின் 3-ம் நாள் இன்று: நவக்கிரக ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை நடைபெற்ற நவக்கிரக ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, புனித நீராடி மகிழ்ந்தனர்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா புஷ்கரம் கடந்த அக்.11-ம் தேதி தொடங்கி இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் படித்துறைக்கு வந்து புனித நீராடிச் செல்கின்றனர்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கரம் நடைபெறும்.
புஷ்கர விழாவின் 3-வது நாளான இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தோஷம் விலக்கும் நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டது.
பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி, மாலையில் மகதி வெங்கட சுப்பிரமணியன் சொற்பொழிவு, சென்னை ஹம்ரிதா நரேந்திரன் பரத நாட்டியம், இரவில் பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகிறது.