திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தொடர் விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ம் தேதி தொடங்கி விஜயதசமியுடன் நேற்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என வெவ்வேறு அலங்காரத்திலும், வெவ்வேறு வாகனத்திலும் மலையப்பசாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றும், காத்திருப்பு அறைகளில் பல மணி நேரம் அமர்ந்திருந்தும், சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். நேற்று காலை 7 மணியிலிருந்து சர்வ, திவ்ய தரிசனம் மூலம் பெருமாளை தரிசித்தனர். இதில், திவ்ய தரிசனம் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசனம் செய்த பக்தர்கள் மட்டும் 3 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்தனர். ஆனால், சர்வ தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர்.