ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் பௌர்ணமி திதியன்று அன்னாபிஷேகம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக அனைத்து சிவாலயங்களிலும் பிரதி வருடமும் நடத்தப்படும் விசேஷம் தான் அன்னாபிஷேகம். கிராமங்களாகட்டும், நகரங்களாகட்டும், சின்ன சிவாலயம் ஆகட்டும், பெரிய சிவாலயமாகட்டும் சுருக்கமாகவும், விரிவாகவும் நடத்தப்படுவது தான் அன்னாபிஷேகம்.
லிங்காதாரமாக இருக்கக்கூடியவர் தான் சிவன். லிங்க வடிவத்தில் இருக்கும் சிவன், நங்கநல்லூரில் அர்த்தநாரிஷ்வரராகவும், தஞ்சையில் பிரகதீஸ்வரராகவும், கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகப்பெரிய சிவலிங்கமாகவும் காட்சியளிக்கிறார். புகழ்பெற்ற இந்த சிவாலயங்களில் நாளைய தினம் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னம் என்றால் என்ன? சாப்பிடக்கூடிய அனைத்துப் பொருட்களும் அன்னம் என்றே சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. குறிப்பாக நாம் தினந்தோறும் சாப்பிடக்கூடிய சாதத்தின் பெயரையே அன்னம் என்கிறோம். ஐப்பசி மாத பௌர்ணமியன்று நிகழ்த்தக்கூடியதான அன்னாபிஷேகத்தில், சுவாமிக்கு நிகழ்த்தக்கூடிய ஒரு நிகழ்வாகும். லிங்கம் முழுவதும் உச்சி முதல் பாதம் வரையிலாக அன்னத்தால் அபிஷேகம் செய்வது. அன்னம் மட்டுமன்று காய்கறி, பழங்கள், பட்சணங்கள் என அனைத்தும் லிங்க திருமேனியில் வைத்து அலங்கரிப்பர்.
ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கிறோம்?
மாதாமாதம் பௌர்ணமி வருகின்றதே? எதற்காக ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கிறோம்?
ஆகமத்தில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விதி உள்ளது. சாஸ்திரப்படி ஐப்பசி கார்த்திகை ஆகிய இரண்டு மாதத்திற்கு சரதிருது என்று பெயர் உண்டு. சரதிருது மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. "சரத்சந்திரவதனா" சரத் காலத்தில் வரும் சந்திரனுக்கு ஒரு அழகுண்டு. பௌர்ணமி காலத்தில் சந்திரன் எப்படி அழகாக இருக்குமோ...அவ்வளவு அழகாம் அன்னையின் திருமுகம். அன்னைக்கு சரத்சந்திரவதனா என்று வர்ணிப்பதுண்டு.
பகவானால் சிருஷ்க்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் பகவானுக்கே சமர்ப்பிக்கின்றோம். அதாவது, வருடம் முழுவதும் விளைந்த நெல்லை, அன்றைய தினம் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம். அவ்வாறு அர்ப்பணிப்பதால் அந்த வருடம் முழுவதும் உணவுக்குப் பஞ்சமிருக்காது என்பது ஐதீகம்.
சிவபெருமானுக்கு அனேக பொருட்களை கொண்டு தினந்தோறும் அபிஷேகம் செய்தாலும், ஐப்பசி மாத பௌர்ணமியில் மட்டும் அன்னத்தால் அபிஷேகம் செய்கிறோம். அன்னத்தை பிரம்மம் என்று சொல்லப்படுவதுண்டு. பிரம்ம ஸ்வரூபமாக இருக்கும் அன்னத்தை அன்றைய தினம் அபிஷேகம் செய்வதால், பகவான் அதை ஏற்றுக்கொண்டு உலகம் முழுவதும் அன்னத்தட்டுப்பாடு இல்லாமல் அன்னசாந்தியை நமக்குத் தருகிறார்.
பூர்ண சொரூபியான சிவபெருமானுக்கு அன்றைய தினம் அன்னவார்ப்பு செய்து அவன் அருளாலே அவன் தாள் பணிவோம்..!
தங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலாங்களுக்குச் சென்று அன்னாபிஷேகத்தில் கலந்துகொண்டு, தங்களால் இயன்ற அரிசி, காய்கறிகள், பழங்கள் அளித்து பரமேஸ்வரரின் அருளைப் பெறலாம்.
ஓம் நவசிவாய...ஓம் நவசிவாய...ஓம் நவசிவாய...!