திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் உற்சவர் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக புதன்கிழமை 7-ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலாவும், வியாழக்கிழமை 8-ஆம் திருவிழாவை முன்னிட்டு காலையில் வெள்ளை சாத்தி வீதி உலாவும், பகலில் சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளினார்.
தேரோட்டம்: திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை காலை தொடங்கியது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, திருக்கோயில் இணை ஆணையர் பா. பாரதி, உதவி ஆணையர் செல்வராஜ் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.
பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க, காலை 5.35 மணிக்கு பிள்ளையார் ரதம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து காலை 6.10 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் பெரிய தேரில் புறப்பட்டு, வீதி உலா வந்து காலை 7.20 மணிக்கு நிலைக்கு வந்தார். அதன்பின்னர் காலை 7.30 மணிக்கு வள்ளியம்மன் தேர் திருவீதி வலம் வந்து 8 மணிக்கு நிலையைச் சேர்ந்தது. இரவு சுவாமி, அம்மன் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.