திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நிறைவடைந்ததையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த அண்டு வருகிற 13-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் 9 நாட்கள் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோயில் சுத்தம் செய்யும் பணி இன்று காலை 6 முதல் 12 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து விஐபி தரிசனம் உள்ளிட்ட 8 வகையான தரிசனத்திற்கு ரத்து செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள அனைத்துச் சன்னதிகள், தரை தளம், மேற்கூரை, சுவர்கள், தூண்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல், கோவிலுக்கு வெளியே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் தூண்கள், சுவர்கள், மாடங்கள் ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம் மற்றும் சுகந்த திரவியம் ஆகியவை பூசப்பட்டது.
இதையடுத்து மூலவர் மீது போர்த்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு, பகல் 11 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை அர்ச்சகர்கள் மூலவருக்கு சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் செய்து, தீபாராதனை காண்பித்தனர். நண்பகல் 12 மணிக்குமேல் பிரதான நுழைவு வாயில் கதவு திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.