செங்கல்பட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் வியாழக்கிழமை மாலை சிறப்பு பூஜை மற்றும் விநாயகர் வீதி புறப்பாடு நடைபெற்றது.
செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வெண்ணைக்காப்பு அலங்காரமும், மகாதீபாராதனைஆகியவை நடைபெற்றன.
உற்வச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, இரவு வீதி புறப்பாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், மேலாளர் நரசிம்மன் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல், பெரியநத்தம் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியையொட்டி சிந்தாமணி விநாயகருக்கு வியாழக்கிழமை மாலையில் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு விநாயகர் வீதி புறப்பாடு நடைபெற்றது.
இதனிடையே, செங்கல்பட்டு ரத்தினவிநாயகர் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், என்ஜிஜிஓ நகர் சித்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயிலில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி காலையிலும் மாலையிலும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, பிள்ளையார் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் வாசலில் கோலமிட்டு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இரவில், அனைத்து கோயில்களிலும் விநாயகர் வழிபாட்டையொட்டி கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.