சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
ஆவணி மாதத் திருவிழா மூலவராகிய தாணுமாலயணை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடைபெறுகிறது. ஆவணித்திருவிழாவின் போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 9.30-க்கு மேல் திருவேங்கிட விண்ணவப்பெருமான் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்துவந்து சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
செப்.22-ம் தேதி 9-ம் நாள் திருவிழாவான தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாகப் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். செப்.23-ம் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.