மத ஒற்றுமையும், சகோதரத்துவமும் இந்தியாவின் அடையாளம் என்பதை உறுதி செய்யும் எத்தனையோ நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இது. திருப்பதி
ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலைக்சேவையாற்றி வருகின்றார்கள்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம், பாபு இருவரும் சகோதரர்கள். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மவுலானாவின் மகன்கள் ஆவர். இவர்கள் தங்கள் தந்தையையே குருவாக ஏற்று 7 வயது முதல் நாதஸ்வரம் கற்கத் தொடங்கினார்கள். தனது 17-ம் வயதில் தனியாக நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்த இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலைச்சேவையாற்றி வருகிறார்கள்.
இதையடுத்து, பிரம்மோற்சவம், ரச சப்தமி, ஆனி ஆஸ்தானம், தெலுங்கு வருடப் பிறப்பு, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்விலும் இந்த இஸ்லாமிய சகோதரர்கள் நாதஸ்வர இசையை வாசித்து வருகிறார்கள்.
தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெற்றுவரும் இந்த வேளையில் இவர்களது நாதஸ்வர இசை திருமலை முழுவதும் நிறைகிறது. சகோதரர்கள் இருவரின் இசைத் திறமையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர்களது இசை அர்ப்பணம் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.