திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான புதன்கிழமை சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வந்தார்.
சூரிய பிரபை வாகனம்
உலகிலுள்ள ஜீவராசிகள் வளரத் தேவையான வெப்பத்தை அளிப்பவர் சூரிய பகவான். நவகிரங்களுக்கும் அவரே தலைவர். அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆரோக்கியம் வழங்குகிறார்.
தன் கிரணங்களால் உலகுக்கு ஒளியூட்டும் 7 குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணர் வாகனத்தில் யோகமுத்திரையுடன், பத்ரிநாராயணராக செந்நிற பூக்கள், குருவிவேர் உள்ளிட்ட மலர்களால் செய்த மாலைகளை அணிந்து மாடவீதியில் வலம் வந்தார்.
சந்திர பிரபை வாகனம்
திருமலையில் புதன்கிழமை இரவு சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். தனக்கென்று ஒளியில்லாமல், சூரியனின் ஒளியைப் பெற்று சந்திரன் ஒளிர்கிறது.
பகலில் நேரடியாக ஒளி கொடுக்கும் சூரியன், இரவில் சந்திரனை வைத்து உலகுக்கு ஒளி கொடுக்கிறார். அதனால் குளிர்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மலர்களால் ஆன மாலையை அணிந்து கொண்டு மலையப்ப சுவாமி வலம் வந்தார். அப்போது மாடவீதியில் கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். வாகன சேவைகளில் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
வாகன சேவையின் முன் திருமலை ஜீயர்கள் குழாம் வேதகானம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். வாகன சேவையின் பின் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
சந்திர பிரபை வாகனத்தில் வலம் வந்த மலையப்பர்.