புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனை தரிசித்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
இந்நிலையில், புரட்டாசி மாத பௌர்ணமி திங்கள்கிழமை (செப்டம்பர் 24) காலை 7.41 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 25) காலை 8.42 மணிக்கு முடிவடைகிறது. எனவே, பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் தெரிவித்தார்.