தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா ஆகஸ்ட் 10-ம் தொடங்கி, தொடர்ந்து செப். 18-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, முக்கிய வைபவமான தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, மாரியம்மன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் அம்மன் வலம் வருவதற்கு வசதியாக மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மிதவை தயாரிக்கப்பட்டது. இரவு பூஜைகள் முடிந்து அம்மன் புறப்பாடும், கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
பின்னர் அங்கிருந்து அம்மன் ஊர்வலமாகப் புறப்பட்டு, தெப்பக்குளத்தில் உள்ள மிதவையில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. தெப்பக்குளத்தில் வலம் வந்த அம்மனைப் பக்தர்கள் வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் தெப்ப விடையாற்றி விழா நடைபெறவுள்ளது.