2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் கன்னி ராசிக்கு துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.
கன்னி (உத்திரம் 2,3,4 பாதங்கள் ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள்)
ஜென்மராசிக்கு 3-ல் குரு. இவர் 7-ம் வீடு, 9-ம் வீடு மற்றும் 11-ம் வீடுகளைப் பார்க்கிறார். 7-ம் வீட்டிற்கு குருவின் பார்வை கிட்டுவதால் இந்த ராசியில் திருமணமாகாதோருக்கு திருமணம் ஆகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். பலர் ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டுமென விழைந்திருப்பார்கள்.
அவர்கள் ஆசை இந்தாண்டு நிறைவேறும். 11-ம் இடமென்பது ஒருவரின் ஆசைகள் நிறைவேறுதலைக் குறிக்கும் வீடு. அதற்கு குருவின் பார்வை இருப்பதால் நீங்கள் நெடுநாளாக ஆசைப் பட்டவைகள் ஈடேறும் காலம் வந்து விட்டது. அவைகள் இந்த ஆண்டு நிறைவேறும்.
பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் யோகம் இந்த ஆண்டு இருக்கிறது. ஆகவே ஆபரணத்திற்கு ஆசைப்படும் பெண்களுக்கு அவர்கள் ஆசை நிறைவேறும். அதேபோன்று ஆடை சேர்க்கைக்கு ஆசைப்படும் பெண்களுக்கும் இந்த ஆண்டு அவர்களது ஆசை நிறைவேறும்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் சற்று முன் எச்சரிக்கையுடன் மருத்துவ ஆலோசனையுடன் நடக்க வேண்டும். மகப்பேறு எளிதாய் முடிய இது உதவியாக இருக்கும்.
இளைய சகோதரத்துடனான உறவு நல்ல முறையில் இருக்கிறது. அவர்களால் ஆதாயம் காணப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் படிப்பில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். வீடு, வாசல் வாங்க விழைவோர் சற்று மிகுந்த பிரயாசனையுடந்தான் வாங்க முடியும். அது உடனடியாக நடக்காது. வாய்ப்புக்கள் கை நழுவிப்போய் பின்தான் வாங்க முடியும்.
தை, மாசி மாதங்களில் இவர்கள் உடல் நிலை பாதிப்பிற்குள்ளாகும். சிலருக்கு நரம்பு சம்மந்தமான உபாதைகள் இருந்து வரும். ஏற்கனவே அத்தகைய உபாதையில் இருப்போருக்கு அது சற்று அதிகமாகும்.
வியாபாரத்திலிருப்போருக்கு: இந்த குருப் பெயர்ச்சியின் காரணமாக வியாபாரிகளுக்கு நல்ல முறையில் விற்பனை அதிகரிக்கும். அதன்காரணமாக பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். இது அவர்களுக்கு ஓர் அனுகூலமான ஆண்டு என்றுதான் கூறவேண்டும்.
உத்தியோகத்திலிருப்போருக்கு: இது சற்று போராட்டமான ஆண்டுதான். உத்தியோகம் பெறவும் போராட வேண்டும். பதவி உயர்வு பெறவும் போராட வேண்டும். மேலதிகாரிகளின் ஆதரவு சற்றுக் குறைவாகவே காணப்படுகிறது. வேலைப்பளுவும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
பரிகாரம்: சனிபகவானை சனிக்கிழமைகளில் வலம் வந்து எள் தீபமேற்றி வணங்கி வந்தால் தொல்லைகள் சற்றுக் குறையும்.
*****
துலா ராசிக்காரர்களே, உங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களைப் படிக்க நாளை வரை காத்திருங்கள்!