தென்பெண்ணையாற்றின் வட கரையில் அமைந்துள்ள பழமையான ஊர் மணலூர் பேட்டை. இது விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது.
மலையமான்களும், வானவர்கோவரையர்களும் களமாடியப் பகுதி இது. இந்த ஊரின் அருகில் திருவரங்கத்துக்கே முன்னோடியான ஆதி திருவரங்கம் கோவில், அதியமான் நெடுமானஞ்சி கல்வெட்டு கொண்ட ஜம்பை திருத்தலம் ஆகியவை பிரசித்தி பெற்றவை.
இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் காலத்தில் (கி.பி.730 முதல் 795), மலைய நாட்டரசனாகத் திகழ்ந்த, வானகோவரயன் சித்தவடத்தடிகள் (சிவநெறிச் செல்வர் ஆகையால் அடிகள்) என்பவரின் மகள் மாதேவடிகள், மணலூர் பேட்டை காக்கா நாச்சியார் கோவில் இறைவனுக்கு திருவமுது படைக்கவும், நந்தா விளக்கெரிக்கவும் இரண்டு சிற்றூர்களைத் தானமாக வழங்கியும், பொற்கொடையும் அளித்துள்ளார்.
இச்செய்தி மணலூர் பேட்டை காக்கா நாச்சியார் கோவில் கல்வெட்டில் உள்ளது. மேலும் மணலூர் பேட்டைக்கு 'கல்யாண தேவி மங்கலம்' என்ற மற்றொரு பெயருமுள்ளதாக சித்தலிங்க மடத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
மணலூர் பேட்டையின் வடபகுதி சித்தப்பட்டினம், சித்தவடம் என வானகோவரயன் சித்தவடத்தடிகளின் பெயரால் வழங்கப்பட்டு வந்தது. 17ம் நூற்றாண்டில் மடமொன்று இருந்ததை அவ்வூர் கல்வெட்டால் அறிகிறோம்.
இத்தகைய புகழ்பெற்ற இவ்வாலயம் பாழ்பட்டிருக்க, நல்லோர் சிலர் முயற்சியால் உழவாரம் செய்யப்பட்டு, திருப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் மேலதிகத் தகவல்களைப் பெற 9597738857,9940037776 (விக்னேஸ்வரன்) ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
- சென்னை சேவாஸ் பாண்டியன், கங்காதரன்