சிவ ராஜதானி - நாகையில் பன்னிரு சிவாலயங்கள்!

தெய்வப் பொன்னி நதி வளம் கொழிக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் இருகரைகளிலும்
சிவ ராஜதானி - நாகையில் பன்னிரு சிவாலயங்கள்!

தெய்வப் பொன்னி நதி வளம் கொழிக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் இருகரைகளிலும் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 190  ஆகும். அவற்றுள், காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்றாக விளங்குவதும், மிகப் பழமையானதும், தேவார மூவராலும் பாடல் பெற்றதும்,சக்தி பீடங்களுள் ஒன்றும், சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றும், பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டதும் ஆகிய தலம், நாகப்பட்டினம் என்று தற்போது வழங்கப்பெறும் நாகைத் திருத்தலம். நாகராஜனாகிய ஆதிசேஷன் வழிபட்ட சிறப்புடையதால்,இப்பெயர் வந்தது என்பர் .

ஊழிக்காலத்தில் அனைத்தும் இங்கு ஒடுங்குவதால்,இத்தலம் சிவராஜதானி எனப்பட்டது எனத் தல புராணம் கூறுகிறது. காயா ரோஹாணர் என்ற பெயருடன் சிவபெருமான் அருட்காட்சி வழங்கும் தலங்கள், காஞ்சி, கும்பகோணம்(மகாமகக் குளக் கரை), நாகை ஆகிய மூன்றுமாம். கயிலையையும், காசியையும் போன்று முக்தி மண்டபம் இங்கு இருக்கிறது.

இத்தல எல்லைக்குள், ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம் உள்ளிட்ட பன்னிரண்டு சிவாலயங்கள் உள்ளன. இவை யாவும் புராணச் சிறப்பும்,பழமையும் வாய்ந்தவை. இப்பன்னிரண்டு ஆலயங்களையும் பலர் ஒரே நாளில் தரிசிப்பர்.

1. காயாரோகணம்

(ஸ்ரீ நீலாயதாக்ஷி சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம்)

திருச்சிற்றம்பலம்

நிருத்தனை நிமலன் தன்னை நீணிலம் விண்ணின் மிக்க

விருத்தனை வேத வித்தை விளைபொருள் மூலமான

கருத்தனைக் கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட

ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே..

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்

தலமும் இருப்பிடமும்: புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம்.  இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாகைக்குவர இரயில் மற்றும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.  இரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி. மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

தலத்தின் தொன்மை: பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.

தலத்தின் பெருமை: உமா தேவியும், ஆதிசேஷனும்,புண்டரீக முனிவரும் வழிபட்ட தலம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார் அவதரித்த தலமும் இதுவே ஆகும். 

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்தால்,தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியன அமைந்துள்ளன. சுவாமி பிராகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் இருக்கக் காணலாம். இப்பிராகாரத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன்,முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன், நவக்ரகங்கள்,காட்சி கொடுத்தவர், நடராஜர், பிக்ஷாடனர் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். தியாகராஜர் சன்னதியில் சுந்தர விடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

தீர்த்தங்கள்: சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப் படுகிறது.                    

நாகைப் புராணம் : வடமொழியில் இருந்த இத்தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றித் தருமாறு அன்பர்கள் வேண்டவே, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மகாதேவ சாஸ்திரிகள் என்பவரிடமிருந்து தமிழாக்கம் செய்து கொண்டு, செய்யுள்நடையில்1868ம் ஆண்டு இயற்றினார்கள். புராணம் முழுதும் இயற்றப்பட்டவுடன், 1869 ம் ஆண்டு நாகைப் புராண அரங்கேற்றம் நடைபெற்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் 65 வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், கீழ்வேளூர் சுப்ரமணிய தேசிகர் ஆகியோர் பிள்ளைஅவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்கள். அதே சமயத்தில் சென்னையிலும் இந்நூல் அச்சேறியது.

மகாவித்துவான் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள், இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:

‘இந்நூலில் பல நயங்கள் மிகுந்து விளங்கும். சொல்லணி,பொருளணி,    தொடைநயம்,பொருட்சிறப்பு,சுவைநயம்,நீதி,சிவபக்தி,சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.’

ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத் தக்கது.

2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு நினைவுகூரத் தக்கது.

புராண வரலாறுகள்:ஏழு முனிவர்களுக்கும் சோமாஸ்கந்த வடிவில் காட்சி அளித்தது, அகஸ்தியருக்குத் திருமணக் காட்சி அளித்தது, சாலீசுக மன்னனுக்குத் தரிசனம் அளித்தது, தசரதன் தனியே சனிப் பிரதிஷ்டை செய்தது, சுகுமாரன் என்ற அந்தணனுக்கு சிவராத்திரி அன்று நற்கதி அளித்தது,புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணம் செய்தது, திருமால், பிரமன் முதலிய தேவர்களும், அகத்தியர், வசிஷ்டர் முதலிய முனிவர்களும், முசுகுந்தன்,அரசகேசரி,விசித்திரகவச்சன்,  விரூரகன், பத்திரசேனன் என்னும் அரசர்களும் ,பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்ட தருமன் என்னும் அந்தணர்களும் தருமன் முதலிய வணிகர்களும் வழிபட்டது ஆகியவற்றைப்  புராணம் விரித்து உரைக்கிறது. சுந்தர மூர்த்தி நாயனார் இப்பெருமானைப் பாடிக்,குதிரை, முத்தாரம், வயிரம், கஸ்தூரி, சாந்து, பொன், பட்டாடை, காம்பினோடு நேத்திரம், ஆகியவற்றைப் பெற்றதாகப் பெரிய புராணம் கூறுகிறது. இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில், குதிரைவாகன விழா, சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.

திருவிழாக்கள்: வைகாசியில் பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும்.அப்போது, சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பா கோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று விட்டு, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடை பெறுகிறது.

ஆடிப் பூரத்தில் நீலாயதாக்ஷி அம்பிகைக்கு விமரிசையாக உற்சவம் நடைபெறும். ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசைகளில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

2. அமர நந்தீசுவரர் கோவில்

நாகை பெரிய கோவில் கீழை சன்னதித் தெருவின் முனையில்,கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது இந்த ஆலயம்,சிறிய கோபுர வாசலைக் கொண்டது. நாகைக் காரோணப் புராணத்தில் அமரரேந்திரேச்வரர் என்று காக தீர்த்தப் படலத்தில் சுவாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்கள் வழக்கில் அது,அமர நந்தீஸ்வரர் என ஆயிற்று போலும்!

புராண வரலாறு: அகலிகையை நாடிய இந்திரன் கௌதம முனிவரின் சாபத்தால் காக்கையாக மாறினான். சாப விமோசனத்திற்காக நாகை வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். அதுவே காக்கை தீர்த்தம் எனப்படுவது. தினமும் அதில் நீராடி, காயாரோகனரை வழிபட்டு நற்கதி பெற்றான். ஆலயத்தின் கிழக்கே, ஒரு சிவலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டான். இம்மூர்த்திக்குஅமரனந்தீசுவரர் என்றும், தீர்த்தத்திற்கு வஞ்சி கங்கை தீர்த்தம் பெயர்கள் ஏற்பட்டன.

ஆலயம் அழகிய கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு விளங்குகிறது.

3. அக்கரை குளம் சொக்கநாதர் கோவில்

நாகை பெரிய கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. குறுகிய தெருக்கள் வழியாகச் செல்லவேண்டும். ஆலயத்தின் அருகில் அழகிய குளம் அமைந்துள்ளது.ஒரே ப்ராகாரத்துடன் கூடிய சிறிய கோயில். செட்டியார் பரம்பரையினர் நிர்வகிக்கின்றனர். மொட்டைக்கோபுர வாயிலின் மேல் சுவாமியின் மடியில் முருகனும் அம்பிகையின் அருகில் கணபதியும் அமர்ந்துள்ளவாறு சுதை வடிவங்கள் உள்ளன. சுவாமி, சுந்தரேசுவரர் என்றும் அம்பிகை, மீனாக்ஷி என்றும் அழைக்கப்படுகின்றனர். நாகைக் கோயில்கள் பண்ணிரண்டின் விவரங்களை ஒரு பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

- சிவபாதசேகரன்

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com