வெண்ணிக் கரும்பேஸ்வரர் திருக்கோயில்

மக்கள் வழக்கில் ‘கோயில் வெண்ணி’ என்று அழைக்கப்படுகின்றது. பழைமையான ஊர்.
வெண்ணிக் கரும்பேஸ்வரர் திருக்கோயில்

மக்கள் வழக்கில் ‘கோயில் வெண்ணி’ என்று அழைக்கப்படுகின்றது. பழைமையான ஊர். சங்ககாலப் புலவர் வெண்ணிக் குயத்தியார், புறநானூற்றுப் பாட்டில் கரிகாற் சோழனின் வெண்ணிப் போரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

‘வென்றியூர்’ என்பது ‘வெண்ணியூர்’ என்று வழங்கி, ‘வெண்ணி’ என்று சுருங்கியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. கரும்பு, நந்தியாவர்த்தக் காடுகளாக இருந்த இவ்விடத்தில் இருமுனிவர்கள் தமக்குள் மாறுபட்டுக் கூச்சலிட, அவ்வழியே வந்த முசுகுந்தன் அதுகேட்டு வந்து, இருவரையும் சாந்தப்படுத்தி, சுவாமி இருப்பதறிந்து கோயில் எழுப்பித்தான் என்பர்.
 

(இப்பெயருக்கு ஏற்ப சிவலிங்கம், கருப்பங்கழிகளை ஒன்று சேர்த்து வைத்துள்ளது போலவுள்ளது.)

இறைவன் - வெண்ணிக் கரும்பேஸ்வரர், வெண்ணிநாதர்.
இறைவி - சௌந்தர நாயகி
தலமரம் - நந்தியாவர்த்தம்
தீர்த்தம் - சூரிய, சந்திர தீர்த்தங்கள்.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற ஸ்தலம். கிழக்கு நோக்கிய அமைந்துள்ளது கோயில். எதிரில் சூரிய தீர்த்தம் - குட்டை போல் உள்ளது. நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். தற்போது மிகவும் பழுதடைந்து, ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் காட்சியளிக்கின்றது. திருப்பணி நடைபெற்று வருகிறது.

சுவாமி கிழக்கு நோக்கியது. அம்பாள் தெற்கு நோக்கியது. கருவறை அகழி அமைப்புடையது. நந்தி, பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.
 

துவாரபாலகர்களைக் கடந்து, துவாரகணபதியை வணங்கி உட்சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் சுயம்பு - சதுர ஆவுடையார். அம்பாள் சந்நிதிக்குப் பக்கத்தில் நடராஜ சபை உள்ளது. தலப்பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம் - அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள், இருபுறமும் துவாரபாலகியர் உருவங்கள் கதையில் உள்ளன. அம்பாளுக்குப் பிரார்த்தனையாக வளையல்களைக் கோர்க்கும் பழக்கம் இங்குள்ளது.
 
பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக் கூறுகிறது.

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com