டைரக்டர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய கலைஞர்கள் எவரும் சோடை போனதில்லை. இப்போது அறிமுகமாகியுள்ளவர் ராதா. 'அலைகள் ஓய்வதில்லை' படத்திற்கு யாரை கதாநாயகியாகப் போடலாம் என்று பாரதிராஜா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது தயாரிப்பாளர் ஆர்.சி.பிரகாஷ் வந்தார். . 'உங்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் பொருத்தமானவளாக இருந்தால் பாருங்கள்' என்று அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்தார்.
"இந்தப் பெண் மிகவும் நன்றாக இருக்கிறாளே ! உடனே நேரில் பார்க்க வேண்டும்!" என்றார் பாரதிராஜா.
ஆர்.சி.பிரகாஷ் மூலம் தகவல் கிடைக்கவே சரசம்மாவும், அம்பிகாவும் உதயசந்திரிகாவை பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்றார்கள்.
பாரதிராஜ பல கோணங்களில் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார் "கொஞ்சம் சிரி" என்றார். . சிரித்ததும், அழத் தெரியுமா என்றதும் கிளிசரின் போடாமலேயே அழுது காட்டினாள் அவள். "வெரி குட், நடிக்கிறியாமா நீ?"என்று கேட்டதும், "சரி சார், நடிக்கிறேன்! என்று ஒப்புக் கொண்டாள் . "அலைகள் ஓய்வதில்லை" படத்தின் கதாநாயகியாக அந்தப் பெண் ஒப்பந்தம் செய்யப்பட்டாள் . அவளது இயற்ப்பெயரான உதயசந்திரிகாவை "ராதா" என்று மாற்றினார் பாரதிராஜா.
ராதாவை சந்திக்கிறோம்.
முதல் முறையாக நடிக்கும் போது படப்பிடிப்பில் உங்கள் அனுபவம் எப்படி?
முதன் முறையாக கேமராவுக்கு முன்னால் நின்ற போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் டைரக்டர் தைரியம் சொல்லி நடிக்க வைத்தார். ஆனால் முதல் ஷாட் 'ஓகே' என்று டைரக்டர் சொன்ன பின்னாடிதான் நிம்மதியே வந்தது.
நடிப்பில் போதிய முன் அனுபவம் இல்லாத உங்களால் " அலைகள் ஓய்வதில்லை" படத்தில் எப்படி திறம்பட நடிக்க முடிந்தது?
டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நடித்தேன். அவ்வளவுதான்.
தொடர்ந்து நடிப்பதால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட் டீர்களா?
"நோ! நோ! இப்போதும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். தபால் மூலம் படிப்பதால் நோ ப்ராபளம்.
பாரதிராஜாவால் அறிமுகபடுத்தப்பட்டு நல்ல கேரக்டரை ஏற்று நடித்துள்ள நீங்கள், தொடர்ந்து எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிப்பீர்கள் ?
படம் பார்க்கிற ரசிகர்களுக்கு முழுமையான மன நிறைவை ஏற்படுத்துகிற வகையில் அந்த கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று கருதுகிறேன். கதைக்கும் காட்சிக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமாக இருந்தால் அதிக கவர்ச்சியாக கூட நடிக்கலாம்.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ்)