புதிய இளம் டைரக்டர் ஒருவர் , சாதாரணமான நட்சத்திரங்களை வைத்தே ஒரு படத்தை எடுத்து வெற்றிகரமாக ஓட வைத்திருப்பதே ஒரு சாதனைதான்.
'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன்தான் இந்த பெருமைக்குரியவர்.
"டைரக்சன்கிறத நான் ஒரு தொழிலா கத்துக்கிட்டதில்ல. எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்டாகப் பணியாற்றியதில்லை. கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் போன்ற படங்களுக்கு பாக்யராஜுடன் சேர்ந்து ஸ்க்ரிப்ட் ஒர்க் பண்ணி இருக்கேன். ஸ்க்ரிப்ட்ல நாம் என்ன பண்ணிணோம்க்கிறது நமக்குத் தெரியும். படம் வெளிவந்தவுடன் நாம் பார்க்கிறோம். நாம எழுதின ஸ்க்ரிப்ட்டை டைரக்டர் எப்படி எழுதியிருக்காருன்னு தெரியுது. இப்படித்தான் நான் டைரக்சன் கலைய கத்துக்கிட்டேன். பிறவியிலேயே கலை உணர்ச்சின்னு ஒண்ணு இருந்தா இதுவெல்லாம் சுலபம்தான்.
படபடவென்று பேச ஆரம்பித்தார் சுந்தர்ராஜன்.
"நான் ஒரு கதாசிரியன். கதையை எழுதும்போதே ஒவ்வொரு காட்சியாக நம் மனசுக்குள்ளேயே ஒரு திரைப்படம் ஓடி முடிஞ்சிடும்.
என்னதான் நல்ல கதையா இருந்தாலும் ஒரு மோசமான டைரக்டரால் அது படமாக்கப்பட்டால் அது குட்டிச்சுவராத்தான் போகும்.
ஒரு படம் தோல்வி அடைஞ்சா தோல்விக்கு காரணத்தை யார் தலையிலும் போடலாம். கதை சரியில்லை என்றோ, டைரக்சன் சரியில்லை என்றோ அல்லது நடிகர்கள் சரியில்லை என்றோ குற்றம் சாட்டலாம்.
ஆனால் ஒரு வெற்றிப்படத்திற்கு இதுதான் காரணம் என்று வரையறுத்து பிரிக்க முடியாது. டைரக்சன், நடிப்பு, பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கணும்.
பயணங்கள் முடிவதில்லைக்கு கிடைத்த வெற்றியும் இப்படித்தான். என் டைரக்சனுக்கு மட்டும் அந்தப் பெருமை சேராது. எல்லா அம்சங்களும் சிறப்பா இருந்ததும் ஒரு காரணம்.
ஒவ்வொரு படத்திலிருந்து நிறைய கத்துக்கொண்டு அடுத்த படத்துக்கு போகிறேன். இதனால் ஒவ்வொரு படத்திலும் வெற்றி பெறுவேன்னு நம்பிக்கை இருக்கு.
படம் இப்படி ஒரு வெற்றியை அடையும் என்று எதிர் பார்த்தீர்களா?
எதிர்பாராத வெற்றிதான். ஆனாலும் படம் எடுக்கும்போது, 'நிச்சயமாக தோல்வியை மட்டும் சந்திக்காது' என்கிற நம்பிக்கை இருந்தது. குரலில் ஒரு அழுத்தம் தெரிந்தது.
- ஆர்.சி.சம்பத்
(சினிமா எக்ஸ்பிரஸ் - 01.07.82)