கன்னடத்தில் கே.பாலசந்தர் டைரக்சனில் முதன்முறையாக நடித்திருகிறீர்கள்..'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிகை சுஜாதா ஏற்றிருந்த பாத்திரத்திற்கு உங்களை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? அவர் டைரக்சனில் நடித்த அனுபவங்கள் குறித்து?
என்னை கே .பாலசந்தர் தேர்ந்தெடுக்க காரணம்.எல்லாரும் சொன்னார்கள்.நான் இளமையாக இருக்கிறேன், அதனால்தான் பாலசந்தர் சார் தேர்ந்தெடுத்துள்ளார் என்று சொல்கிறார்கள். பாலசந்தர் சாருக்கு சில சமயம் அதிகமாக கோபம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் என் அனுபவம் அப்படியல்ல. அவர் சாந்தமாகி விட்ட நேரத்தில் நான் நடிக்க வந்துருக்கேன் போலிருக்கு. நடிக்கும் போது நடிப்பின் ஒவ்வொரு நுணக்கத்தையும் கவனிக்கிறார்.
அந்தப்படத்தில் கமலஹாசனும் நடிக்கிறார் அல்லவா..? அவருடன் நடிக்கும் போது உங்கள் அனுபவம்?
முதலில் ஒரே டென்ஷன்தான். உண்மையைச் சொல்லப் போனா உதறல். கமலைப் பார்த்ததும் நடிக்க முடியாமல் போய் விடுமோ என்று கூட பயந்தது உண்டு. ஆனால் கமல் ரொம்ப சகஜமாக எந்த வித பாதிப்புக்கும் இடம் தராமல் நடித்ததால் சிரமம் இல்லை. மறுநாள் சித்தி வாணிகமலிடம் என் நடிப்பைப் பத்தி என்ன சொன்னார் என்று கேசுவலாக கேட்டேன். நல்லா நடிச்சதாங்க கமல் சொன்னார்னு அவங்க சொன்னாங்க.
நீங்கள் கேமரா வுமனாகத்தான் பணியாற்ற விருப்பம் என்று முன்பு பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள். இப்போது நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் ஒளிப்பதிவாளராகும் திட்டம் உண்டா?
நடிக்கிறவரை முக்கியமான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன். அம்மா, அக்கா ரோலெல்லாம் நடிக்க நான் விரும்பவில்லை. அப்படிப் பார்க்கும் போது சில ஆண்டுகள்தான் நடிக்க முடியும். அதற்கு பிறகு காமிரா உமனாகத்தான் பணியாற்றுவேன்.
பிற மொழி படங்களில் நடிக்கும் போது ஏதாவது வித்தியாசமாக உணர்கிறீர்களா?
கண்டிப்பாக! தமிழ்ப்படங்களில் இருப்பதை போன்று 'மசாலா' வாக இருந்தால் தெலுங்குக்காரர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு நல்ல கதை முக்கியம். கதாபாத்திரங்களை அமைக்கும் போது உயிர் கொடுக்கும் வகையில் அமைக்கிறார்கள்
கிளாமர் ரோல்களில் நடிப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
ஓரளவு கிளாமர் தேவைதான். அது கதாபாத்திரத்தை பொருத்த விஷயம். ரோலுக்குத் தேவையானால் கிளாமர் இருக்கலாம்.கிளாமரான காட்சி இருக்க வேண்டும் என்று வலிந்து திணிப்பதைத்தான் நான் வெறுக்கிறேன்.
பேட்டி: குயிலி ராஜேஸ்வரி
படங்கள்: சிக்கி
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.10.83 இதழ்)