எனக்கு முதலில் கத்தி எடுத்துக் குடுத்து சண்டை போட கத்துக்க கொடுத்தவரே எம்.ஜி.ஆர் தான். அன்னிலேர்ந்து நானும் எம்.ஜி.ஆரும் கிட்டத்தட்ட நாற்பது வருடம் கத்திச் சண்டை, மற்றும் பல வித பைட்டிங் பண்ணியிருக்கோம். எங்க ரெண்டு பேருக்கும் என்னிக்குமே டூப் போட்டதில்லே.
எனக்குத் தெரிஞ்சு முதல் முதலிலே ஒரு படத்தின் வெற்றிக்கு விழா கொண்டாடியது , நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்களை கவுரவிச்சதுன்னா அது எம்.ஜி,.ஆரின் 'நாடோடி மன்னன்' படத்தில்தான்.
இப்போ ஆர்டிஸ்ட்டுகள் வந்து குறிப்பிட்ட ரோலில் தொடர்ந்து வந்தால், 'ப்ராண்ட்' பண்ணிடுவாங்கன்னு பயப்படுறாங்க. நாங்க அப்படியில்லே. 'வில்லன் வீரப்பான்னா' வில்லன்தான். பயங்கரச் சிரிப்பு கூடவே சிரிக்கணும். முதலிலே படத்திற்காக அப்படிச் சிரிச்சேன். டைரக்டர் என்னை சிரிக்க வைச்சார். ஒவ்வொரு படத்திற்கும் அது ஒரு மஸ்ட்.
ஜெமினி வாசன் சார்கிட்ட ஒரு நாள், :"நான் நல்லவன் வேஷம் போடனுமே " னு கேட்டேன். 'நீ நல்லவன் வேஷம் போட்டால் அப்புறம் படமேது? உன் பயங்கரச் சிரிப்பைக் கேக்குறதுக்கே நிறைய இளைஞர்கள் படம் பாக்க வராங்க தெரியுமா? என்று அவர் கேட்டார்.
தமிழ் பட உலகிலே ஒரு பெக்குலியாரிட்டி பாருங்க.மூன்று வில்லன்களான நான் நம்பியார்,மனோகர் மூன்று பேரும் படங்களில் நிறைய கொலைகள் பண்ணிருக்கோம். ஏராளமான பொண்ணைக் கற்பழிச்சிருக்கோம். ஆனா எதோ கடவுள் புண்ணியத்திலே நிஜ வாழ்க்கையிலே மூன்று பேரும் தெய்வ பக்தி நிறைய உடையவர்களாக, நல்ல கவுரவமாக நாணயமாக வாழ்ந்துகிட்டு இருக்கோம்.
குயிலி ராஜேஸ்வரி
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.82 இதழ்)