எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் 'அடோர்' பண்ண ஒருத்தர் எம்.ஜி.ஆர் அவர் நடிச்ச படங்களை திரும்ப திரும்ப பார்த்திருக்கேன். என்னிக்காவது ஒருநாள் அவரோட ஜோடியா நடிக்க மாட்டோமான்னு மனசு நினைச்சதுண்டு.
சில நிமிட இடைவெளிக்கு பின் சரோஜா தேவி தொடர்ந்தார்.
அவரோட நான் நடிச்சது மொத்தம் இருபத்து ஆறு படங்கள். அத்தனையும் சக்ஸஸுங்கறதுதான் இதுல ரொம்ப விசேஷம். எம்.ஜி.ஆர் படம்னு எடுத்துக்கிட்டா கூட யார் நடிச்சாலும் முதல்ல அது எம்.ஜி,.ஆர் படம்.அவர் கூட நடிச்ச நடிகைங்கிறத வச்சுதான் எங்களுக்கு மரியாதை, அந்தஸ்து எல்லாமே.
விஜயா ஸ்டூடியோவுல 'கச்ச தேவயானை' படத்துல நான் நடிச்சுகிட்டு இருந்தப்பத்தான் முதல்ல எம்.ஜி.ஆரை பார்த்தேன். உள்ளே அவர் நுழைஞ்சதும் ஒரே பரபரப்பு. நேர்ல பாத்தப்ப கையும் ஓடலை..காலும் ஓடலை ..! சின்னவர் என்னைக் காமிச்சு டைரக்டர் கே.சுப்ரமணியத்துக்கிட்ட ஏதோ சொன்னதை ஓரக்கண்ணால பார்த்தேன். அடுத்த நிமிஷம், கே.சுப்ரமணியம் அவரைக் கூப்பிட்டுட்டு என்கிட்ட வந்தாரு. வணக்கம் சொல்லிட்டு பேசாம நின்னேன். பதிலுக்கு வணக்கம் சொன்ன அவர், நீதான் சரோஜாதேவியா ? தமிழ் நல்லா பேசுவியா ? ன்னு கேட்டார். மெதுவா தலையாட்டினேன் . அப்புறம் கொஞ்ச நேரம் டைரக்ட்டர்கிட்ட பேசிக்கிட்டு இருந்த அவர் கிளம்பி போயிட்டாரு.
மறுபடி எப்ப அவரை சந்திப்போம்னு நினைச்ச நேரத்துலதான் 'திருடாதே' படத்துல முதன்முதலா அவரோட நடிக்க ஒப்பந்தமானேன்.உண்மையா சொல்றேன்.அந்த சந்தோசத்தை என்னால் வார்த்தைகளால வர்ணிக்க முடியாது.என்னிக்காவது ஒருநாள் அவரோட நடிக்க மாட்டாமான்னு நினைச்சப்ப, சே.. உன்னோட ஆசைக்கு அளவே கிடையதான்னு உள்மனசு என்னை அதட்டிச்சுனு சொன்னேன்ல? "இபப என்ன சொல்றேன்னு? " எனக்கு நானே கர்வமா பதில் சொல்லிக்கிட்டேன்.
சந்திப்பு: உத்தமன்
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.05.82 இதழ்)