ஆவடி பெருநகராட்சி 17-ஆவது வார்டு ஆவடி-பூவிருந்தவல்லி சாலையில் மூர்த்தி நகர் உள்ளது. இந்த நகரில் எம்.ஜி.ஆர். தெரு, ஜீவா தெரு, பாரதி தெரு, கம்பர் தெரு, வ.உ.சி. தெரு போன்ற தெருக்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் நகராட்சிக்கு அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை சாலை வசதியோ, குடிநீர் வசதியோ, கழிவுநீர் வசதியோ செய்து தரவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் மக்கள் தங்கள் வீடுகளின் அருகிலேயே பள்ளம் தோண்டி கழிவுநீரை விடுகின்றனர். இதனால் கொசுத் தொல்லையும், சுகாதாரக் கேடுகளும் ஏற்படுகின்றன. எனவே, மூர்த்தி நகருக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.பழனி, ஆவடி.