இருளில் வாவின் சந்திப்பு
சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் இரண்டாவது பிரதான சாலையையும், தெற்கு நிழற்சாலையையும் இணைக்கும் "வாவின்' நான்கு முனைச் சந்திப்பு எப்போதுமே இருளில் மூழ்கியுள்ளது.
நாள்தோறும் இரவு நேரத்தில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள், இதர வாகனங்கள் வேகமாக கடந்து செல்லும் முக்கியச் சந்திப்பு இது. அப்பகுதியில் சாலை சீரமைப்பு, கால்வாய் பணி எனப் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை. இப்பகுதியில் உயர்மின்கோபுர விளக்குகளோ, சாதாரண மின்விளக்குகளோ இல்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல நேரங்களில் இப்பகுதியில் உள்ள சிக்னலும் இயங்குவதில்லை.
அதேபோல் முகப்பேர் செல்லும் சாலைப் பகுதியை இரண்டாகப் பிரிப்பதற்கு உயரமான தடுப்புவேலிகள் இன்றி சாதாரண சிமென்ட் கற்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் சாலைத் தடுப்பு இருப்பதை இரவில் தெரிந்துகொள்ளும் வகையில் ஒளிப்பானோ, வண்ணப் பட்டைகளோ இல்லை.
இதனால் இரவு நேரத்தில் இச்சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் விபத்துகளைச் சந்திக்கும் நிலை நீடிக்கிறது. தொடர்புடைய சாலை பராமரிப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் உடனடியாக இப்பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கை.
- ராதாகிருஷ்ணன், அம்பத்தூர்.