சீர்பாத வகுப்பு முதலானவற்றைப் பாடுவதற்காக முத்தமிழை — தமிழ்த்ரயத்தை — இறைவனிடம் வேண்டுகின்ற இது, பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த பாடல். ‘நின்பணி தமிழ்த்ரயத்தை அருள்வாயே’ என்று கோருகிறார்.
அடிக்கு ஒற்றொழித்து இருபத்தாறு எழுத்துகள்; தொங்கல் சீரை ஒழித்து மற்ற அனைத்தும் குறில்; வல்லொற்றும் மெல்லொற்றும் கலந்தொலிக்கும் நடையுள்ள பாடல் இது. வாக்கு வல்லமை வேண்டுவோர் மனனம் செய்து ஓதற்குரிய பாடல்.
தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த
தந்ததன தத்த தத்த தனதான
கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த
கெண்டையள்பு னக்கொ டிச்சி - யதிபாரக்
கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி
கிங்கரனெ னப்பு டைத்த - பெயர்பேசா
நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர்
நிந்தனையில் பத்தர் வெட்சி - மலர்தூவும்
நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க
நின்பணித மிழ்த்ர யத்தை - யருள்வாயே
கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த
கங்கனும தித்தி கைக்க - மதம்வீசுங்
கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட
கம்பனும திக்க வுக்ர - வடிவேல்கொண்
டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து
அன்பர்புக ழப்பொ ருப்பொ - டமராடி
அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி
அண்டர்சிறை வெட்டி விட்ட - பெருமாளே.