‘உன்னுடைய தாமரைத் திருப்பாதங்களால் ஆண்டுகொள்ள வேண்டும்’ என வேண்டுகிற இப்பாடல் பழநித் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட இந்தப் பாடலில் எல்லாச் சீர்களிலுமே மூன்று-மூன்று எழுத்துகளே பயின்றாலும் அமைப்பால் சீருக்குச் சீர் வேறுபடுவன. ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் ஒற்றில்லாத மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் கணக்கில் சேராத இரண்டாமெழுத்து மெல்லொற்றாக அமைந்த மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை; மூன்று, நான்கு, ஏழு, எட்டு, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்குகின்ற மூன்றெழுத்துகளை உடையவை.
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன தனதான
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
குழல ணிந்தநு ராகமு மேசொலி
விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி யழகாக
விரிகு ரும்பைக ளாமென வீறிய
கனக சம்ப்ரம மேருவ தாமதி
விரக மொங்கிய மாமுலை யாலெதி ரமர்நாடி
இதமி சைந்தன மாமென வேயின
நடைந டந்தனர் வீதியி லேவர
எவர்களுஞ் சிதமால்கொளு மாதர்கள் வலையாலே
எனது சிந்தையும் வாடிவி டாவகை
அருள்பு ரிந்தழ காகிய தாமரை
இருப தங்களி னாலென யாள்வது மொருநாளே
மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
யுடலி ரண்டுகு றாய்விழ வேசின
வடிவு தங்கிய வேலினை யேவிய அதிதீரா
மதுர இன்சொலி மாதுமை நாரணி
கவுரி யம்பிகை யாமளை பார்வதி
மவுந சுந்தரி காரணி யோகினி சிறுவோனே
பதமி சைந்தெழு லோகமு மேவலம்
நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
பவனி வந்தக்ரு பாகர சேவக விறல்வீரா
பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
வடிவு கொண்டருள் காசியின் மீறிய
பழநி யங்கிரி மீதினில் மேவிய பெருமாளே.