இறைவனைப் பாடும் வரத்தைக் கேட்கும் இந்தத் திருப்புகழ் காஞ்சித் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 26 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில் என்ற இரண்டெழுத்துகளோடு கணக்கில் சேராத ஒரு வல்லொற்றும்; இரண்டு, ஏழு, நான்கு, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு வல்லொற்றுகளும்; மூன்று, எட்டு ஆகிய சீர்களில் மூனறு குற்றெழுத்துகளும் ஒரு வல்லொற்றும் அமைந்துள்ளன. (சீர்க்கணக்கில் தொங்கல் சீரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.)
தானத் தத்தத் தத்தன தத்தத் தனதான
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் கொடியார்தங்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித் திரியாதே
பாடப் பத்திச் சித்த மெனக்குத் தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் பொரும்வேலா
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே.