காலன் எதிர்ப்படும்போது தாளைத் தொழும் நினைவு வேண்டும் என்று கோரும் இப்பாடல் திருவானைக்காவுக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் கொண்டு அமைந்தவை.
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் தனதான
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத் துறவோரை
ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
பாளித படீரத் தனமானார்
காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமபி ராமக் கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற் புகல்வேனோ
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப் பரியேறிப்
பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச் சிறியோனே
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள வேனற் புனமேவுந்
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப் பெருமாளே.