தன்னை ஆண்டருளுமாறு வேண்டுகிற இந்தத் திருப்புகழ் கரபுரம் என்றும் கரபுரி என்றும் அறியப்படும் விரிஞ்சிபுரத்துக்கானது. இத்தலம் வேலூருக்கருகிலுள்ள காட்பாடியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளை உடைய பாடல்; ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள், ஐந்தைந்து எழுத்துகளைக் கொண்ட குற்றெழுத்துகள்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் இரண்டெழுத்துச் சீர்கள், இரண்டசைகளை உடையவை. ஓசையைக் குலைக்காத இடையின மெய் இரண்டு மூன்று இடங்களிலும், ஓசைக்கு இடைஞ்சல் செய்யாத மெல்லின மெய் ஒரே ஒரு இடத்திலும் பயில்கின்றன. வல்லொற்று பயிலவே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.
தனதனன தான தனனதன தான
தனதனன தான - தனதானா
குலையமயி ரோதி குவியவிழி வீறு
குருகினிசை பாடி - முகமீதே
குறுவியர்வு லாவ அமுதினினி தான
குதலையுமொ ராறு - படவேதான்
பலவிதவி நோத முடனுபய பாத
பரிபுரமு மாட - அணைமீதே
பரிவுதரு மாசை விடமனமொ வாத
பதகனையு மாள - நினைவாயே
சிலைமலைய தான பரமர்தரு பால
சிகிபரிய தான - குமரேசா
திருமதுரை மேவு மமணர்குல மான
திருடர்கழு வேற - வருவோனே
கலின்வடிவ மான அகலிகைபெ ணான
கமலபத மாயன் - மருகோனே
கழனிநெடு வாளை கமுகொடிய மோது
கரபுரியில் வீறு - பெருமாளே.