‘மௌன நிறைவு கொண்டதான உண்மை ஒளியை உபதேசித்து அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் காஞ்சி தலத்துக்கானது.
ஒவ்வொரு சீரிலும் வேறுபட்ட ஓசையமைப்பு உடைய இந்தப் பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 21 எழுத்துகள் உள்ளன. முதற் சீர் மூன்று குற்றெழுத்துகளையும்; இரண்டாம் சீர் நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளையும்; மூன்றாம் சீர் மூன்று குற்றெழுத்துகளையும் கணக்கில் சேராத ஒரு வல்லொற்றையும்; நான்காம் சீர் நான்கு குற்றெழுத்துகளையும்; ஐந்தாம் சீர் இரண்டு நெடிலையும்; ஆறாம் சீர் குறில்-வல்லொற்று-குறில்-வல்லொற்றையும் கொண்டு அமைந்திருக்கின்றன.
தனன தானன தத்தன தனதன
தானா தத்தத் தனதான
கரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத் தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக் கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுலச
காதே வர்க்குப் புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் டினிலாளுங்
குரும கீதலமுட்பட வுளமது
கோடா மற்க்ஷத் ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப் பெருமாளே.