‘எனக்குக் காட்சிகொடுத்து ஆண்டருளியதை ஒருபோதும் மறவேன்’ என்று சொல்லும் இப்பாடல், சிதம்பரத்துக்கு அருகிலுள்ள திருவேட்களத்துக்கானது. இப்பாடலில் அம்பிகையை வினைகளை அழிப்பவள் என்ற பொருளில் ‘விநாயகி’ என்று குறிப்பிடுகிறார்.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகள் பயில்கின்றன; இவற்றில் கணக்கில் சேராத நான்காம் எழுத்து வல்லொற்று; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களிலுள்ள மூன்றெழுத்துகளில் முதலாமெழுத்து நெடில்; கணக்கில் சேராத இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகள் உள்ளன. இவற்றில் ஒற்று பயிலவில்லை.
தனதத்தன தாத்தன தானன
தனதத்தன தாத்தன தானன
தனதத்தன தாத்தன தானன தனதான
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குயில் மீட்டிய தோளொடு முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலிற்புற நோக்கிய னாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும் அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
யவர்முத்தமி ழாற்புக வேபர
கதிபெற்றிட நோக்கிய பார்வையு மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதறக்கட லார்ப்புற வேயயில் விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி
செகமிப்படி தோற்றிய பார்வதி யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
விறல்மெய்த்திரு வேட்கள மேவிய பெருமாளே.