‘ஒருபோதும் குன்றாத வாழ்வை அருளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் சிக்கல் தலத்துக்கானது. இத்தலத்தில் சிங்காரவேலன் என்ற பெயரோடு எழுந்தருளியிருக்கும் இறைவனை ‘சிக்கல் சிங்கார வேலவ’ என்று அழைப்பதைக் காணலாம்.
அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் கணக்கில் சேராத இரண்டு வல்லொற்றுகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் ஒரு குறில், ஒரு மெல்லொற்று, ஒரு நெடில், ஒரு குறில் என்ற அமைப்பும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
இப்பாடலில் முதலடியில் இருக்கும் ‘ரக்ஷிக்கும்’ என்ற எழுத்தமைப்பை குகத்திரு வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் கையாண்டுள்ளதால் நாமும் அப்படியே எடுத்தாண்டுள்ளோம். ‘ரட்சிக்கும்’ என்ற எழுத்தமைப்பே எழுத்துக் கணக்குக்கு இசைந்தது என்பது நம் கருத்து.
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன தனதானா
புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
ரிடகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
பொருபுய திக்கெட் டும்போயு லாவிய புகழாளா
பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய கவிபாடி
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு மிடிதீர
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு மருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
இமயம கட்குச் சந்தான மாகிய முருகோனே
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் மருகோனே
அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே.