பதச் சேதம் | சொற் பொருள் |
உரத்து உறை போத தனியான
| உரத்து: உறுதியோடு; உரத்து உறை: உரத்தோடு உறைகின்ற, வலிமையோடு பொருந்தியிருக்கின்ற; போத: ஞான; தனியான: தனிப்பொருளான; |
உனை சிறிது ஓத தெரியாது
| |
மரத்துறை போல் உற்று அடியேனும்
| மரத்துறை: மரமாகிய இடம், மரக்கட்டை; |
மலத்து இருள் மூடி கெடலாமோ
|
|
பரத்து உறை சீலத்தவர் வாழ்வே
| பரத்து உறை: மேலான நிலையிலுள்ள; சீலத்தவர்: நல்லொழுக்கத்தவர்; வாழ்வே: செல்வமே; |
பணித்து அடி வாழ்வு உற்று அருள்வோனே
| பணித்து: பணிந்து (வலித்தல் விகாரம்); |
வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே
| வரத்து உறை: வரம் தருவதையே தம்முடைய முறையாகக் கொண்ட; நீதர்: நீதியுள்ள; ஒரு: ஒப்பற்ற; |
வயித்திய நாத பெருமாளே.
|
|
உரத்துறை போதத் தனியான உனைச்சிறிதோதத் தெரியாது... உறுதி நிறைந்த ஞானத்துடைய தனிப்பொருளான உன்னைப் போற்றச் சிறிதளவேனும் அறியாமல்;
மரத்துறை போலுற்று அடியேனும் மலத்திருள் மூடிக் கெடலாமோ... அடியேன் மரக்கட்டையைப் போலக் கிடந்து (ஆணவம், கன்மம், மாயை என்ற மும்)மலங்களின் இருளாலே மூடப்பட்டு வீணாகலாமோ? (ஆகாமல் ஆண்டருள்வாய்).
பரத்துறை சீலத்தவர் வாழ்வே பணித்தடி வாழ்வுற்று அருள்வோனே... மேலான நிலையிருப்பவர்களான நல்லொழுக்கம் நிரம்பிய சீலர்களுடைய செல்வமே! உன் பாதத்தைப் பணிந்து வாழ்வுபெறுமாறு அருள்வோனே!
வரத்துறை நீதர்க்கு ஒருசேயே வயித்திய நாதப் பெருமாளே... வரமளிப்பதையே தன்னுடைய நீதி என்ற முறையாகக் கொண்ட சிவபெருமானின் ஒப்பற்ற மகவே! வைத்தீசுரன் கோவிலின் நாதனான சிவனாருடைய பெருமாளே!
சுருக்க உரை
மேலான நிலையிலுள்ள ஒழுக்க சீலர்களுடைய செல்வமே! உன் பாதங்களைப் பணிந்து வாழ்வதான பேற்றை அருளுபவனே! வரம் தருவதையே தன்னுடைய நீதி என்று கொண்டிருக்கும் சிவனாருடைய ஒப்பற்ற மகனே! வைத்தீசுரன் கோவிலின் நாதனான சிவபெருமானின் பெருமாளே (தலைவனே)!
ஞானத்தினுடைய தனிப்பொருளாகிய உன்னைச் சற்றேனும் போற்றுதற்குத் தெரியாமல் அடியே மரக்கட்டைபோலக் கிடந்து மும்மலங்களின் இருளால் மூடப்பட்டு வீணாகலாமோ? அவ்வாறு வீணாகாத வண்ணமாக ஆண்டுகொள்வாய்.