ஒவ்வொரு முறை பிறப்பெடுக்கும்போதும் உயிரைக் கவர்ந்துசென்று இறுதி வெற்றியை அடைபவனானா யமன் என்னை அடக்கியாள்கின்ற காலம் நீங்குவதுதான் எப்போது—பிறவித் துயரிலிருந்து விடுபடுவது எப்போது—என்று கேட்கும் இந்தப் பாடல் திருவேற்காடு தலத்துக்கானது. இது கருமாரியம்மன் ஆலயமன்று. திருவேற்காட்டிலேயே வேதபுரீஸ்வரர் ஆலயம் என்றொரு பழமையான ஆலயமுண்டு. திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பட்ட தலம்.
இந்தத் தலத்தில் முருகன், பிரமனைக் குட்டி சிறையிலடைத்ததற்குப் பரிகாரமாய் சிவலிங்க வழிபாடு செய்வதாகத் தலபுராணம் சொல்கிறது. இந்தத் தலத்திலுள்ள முருகன் கையில் வேல் இல்லாமல், வில்லும் அம்பும் ஏந்திய கோலத்தில் இருக்கிறான். சந்நிதியில் முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. வேறெங்கும் காணமுடியாத அமைப்பு என்று http://www.shivatemples.com/tnaadut/tnt22.php கூறுகிறது.
(படம் நன்றி siva temples)
இனி பாடலைப் பார்ப்போம். அடிக்கு ஒற்றுநீக்கி 25 எழுத்துகள்; ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒற்றொழித்து மூன்றெழுத்துகள்; முதலெழுத்தும் மூன்றாமெழுத்தும் நெடில்; கணக்கில் வராமல் விடப்படும் மூன்றாவது எழுத்து மெல்லொற்று; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கெழுத்துகள் உள்ளன; இவற்றின் மூன்றாமெழுத்து நெடில்.
தானந்தா தனதான தானந்தா தனதான
தானந்தா தனதான தனதான
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
மாளம்போர் செயுமாய விழியாலே
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
ஆடம்பார் குவிநேய முலையாலே
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
வேளங்கார் துடிநீப இடையாலே
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
காலந்தா னொழிவேது உரையாயோ
பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
மாதம்பா தருசேய வயலூரா
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின் மருகோனே
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
வீறங்கே யிருபாலு முறவீறு
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா டுறைசீல பெருமாளே.