‘அதல சேட னாராட’ என்ற பாடலின் சந்தத்தை ஒட்டிய வேறு பாடல்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை — இன்றைய பாடலைப் போலவே — பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தவை. “அளவில் மாறு மாறாத” என்ற கதிர்காமத் தலத்துக்கான பாடலைப் போல சில, சில குறிப்பிட்ட தலங்களைப் பாடிய, இதே சந்தத்தைக் கொண்ட பாடல்களும் உள்ளன. ’என்னை ஆண்டருளே வேண்டும்’ என்று கோரும் பாடல்.
தாள, எழுத்தமைப்புகளில் இந்த எல்லாப் பாடல்களும் ஒன்றே போல அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்டவை. ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளால் ஆனவை; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலும் ஒரு குறிலும் கொண்டவை; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்றெழுத்துகளைக் கொண்டவை; இவற்றில் முதலிரண்டு எழுத்தும் நெடில்.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான தனதான
மனக பாட பாடீர தனத ராத ராரூப
மதன ராச ராசீப சரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகார
மகளி ரோடு சீராடி யிதமாடிக்
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
குறைய னேனை நாயேனை வினையேனைக்
கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத
குருட னேனை நீயாள்வ தொருநாளே
அநக வாம னாகார முநிவ ராக மால்தேட
அரிய தாதை தானேவ மதுரேசன்
அரிய சார தாபீட மதனி லேறி யீடேற
அகில நாலு மாராயு மிளையோனே
கனக பாவ னாகார பவள கோம ளாகார
கலப சாம ளாகார மயிலேறுங்
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார
கருணை மேரு வேதேவர் பெருமாளே.