காலன் என்னெதிரே தோன்றுவதற்கு முன்னால் நீ என்முன்னே தோன்றியருள வேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய பாடல்; எல்லாச் சீர்களுமே ஒற்றொழித்து மூன்று மூன்று எழுத்துகளைக் கொண்டவைதாம் என்றாலும் அவற்றுக்குள்ளும் தாளத்தில் வேறுபாடு காட்டியிருக்கிறார். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒற்றொழித்து மூன்றெழுத்துகளைக் கொண்டவை; இவற்றில் முதலெழுத்தும் மூன்றாமெழுத்தும் நெடிலாக அமைந்துள்ளது; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களும் ஒற்றொழித்து மூன்றெழுத்துகளைக் கொண்டவையே. ஆனால் இவற்றில் சீரான இடைவெளியில் மெல்லொற்று பயில்கிறது. கணக்கில் சேராத இரண்டு, ஐந்து ஆகியவை மெல்லொற்றுகள். இவற்றில் பயிலும் அத்தனை எழுத்துகளும் குற்றெழுத்துகள்.
தானதா னந்தனந் தானதா னந்தனந்
தானதா னந்தனந் தனதான
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் மருகோனே
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் பதிவாழ்வே
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும் பெருமாளே.