‘உன் திருவடிகளை விரும்பிப் போற்றும் மனம் அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவலிதாயத்துக்கானது. இத்தலம் சென்னை வில்லிவாக்கத்துக்கு சுமார் 3 கிலோமீட்டர் மேற்கே உள்ளது.
அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட சிறிய பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு இடையின ஒற்றும்; இரண்டு நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குற்றெழுத்துகளும் பயில்கின்றன.
தனதய்ய தானதன தனதானா
மருமல்லி யார்குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடிய னலையாமல்
இருநல்ல வாகுமுன தடிபேண
இனவல்ல மானமன தருளாயோ
கருநெல்லி மேனியரி மருகோனே
கனவள்ளி யார்கணவ முருகேசா
திருவல்லி தாயமதி லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.