அனைவரும் புலவன் என்று கொண்டாடுகின்ற வரம்வேண்டும் என்று கோருகின்ற இப்பாடல் காஞ்சித் தலத்துக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களிலும் நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களிலும் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் பயில்கின்றது.
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன தந்ததான
தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தருமயில் செச்சைப் புயங்க யங்குற வஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ளம்புகாளப்
புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண
புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன னம்பெறாதோ
பொறையனெ னப்பொய்ப் ப்ரமஞ்ச மஞ்சிய
துறவனெ னத்திக் கியம்பு கின்றது
புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை தந்திடாதோ
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
குறைவற முப்பத் திரண்ட றம்புரி கின்றபேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்நப் புயங்க கங்கணி
குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சிநீலி
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி யெங்களாயி
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் தம்பிரானே.