இறையும் தானும் வேறுவேறாக இல்லாமல் ஒன்றாக அத்துவிதமாகக் கலந்திருக்கும் பேற்றைக் கோரும் இப்பாடல் பழமுதிர்ச் சோலைக்கானது. இதில் நான்காமடியில் ‘சோகமது தந்து எனையாள்வாய்’ என்று வருகின்றது. இங்கே ‘சோகம்’ என்பதற்கு ‘நீ, நான் என்ற வேறுபாடு அற்ற நிலை’ என்று பொருள்.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் குறில், (கணக்கில் சேராத) மெல்லொற்று, குறில் என இரண்டெழுத்துகளுமாக அமைந்திருக்கிறது.
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தனதான
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயம தொழிந்து தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபத மணிந்து பணியேனே
ஆதியொடு மந்த மாகியந லங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானில மலைந்து திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து எனையாள்வாய்
சூரர் குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற பெருமாளே.