போலிக் கவிகளைப் பழித்து, வாக்கிலே பக்திமிக்க செஞ்சொற்களின் பெருக்கு மிகுந்துவருமாறு வேண்டுகின்ற இந்தப் பாடல் பழனிப் பதிக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு மெல்லொற்றும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளுமாக அமைந்துள்ளது.
தனனதன தந்த தத்த தானன
தனனதன தந்த தத்த தானன
தனனதன தந்த தத்த தானன தனதான
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுகியதி குண்ட லப்ர தாபமு முடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
முடிவிலவை யொன்று மற்ற வேறொரு நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற
மகிதலம ணைந்த அத்த யோனியை
வரைவறம ணந்து நித்த நீடருள்
வகைதனைய கன்றி ருக்கு மூடனை மலரூபம்
வரவரம னந்தி கைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே.