இறைவனைத் தரிசித்து அன்பு கொள்வதை வேண்டும் இத் திருப்புகழ் திருப்பரங்குன்றத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு மெல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லொற்றும் அமைந்துள்ளன.
தந்தனந் தந்தத் தனதானா
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.