திருவடிகளையும் மௌன நிலையையும் பெறவேண்டும் என்று கோரும் இந்தப் பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இவையில்லாத மற்ற எல்லாச் சீர்களிலும் நான்கு நான்கு குற்றெழுத்துகளமாக அமைந்துள்ளன.
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன தனதான
அருவ மிடையென வருபவர் துவரிதழ்
அமுது பருகியு முருகியு ம்ருகமத
அளக மலையவு மணிதுகி லகலவு மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
அமளி படஅந வரதமு மவசமொ
டணையு மழகிய கலவியு மலமல முலகோரைத்
தருவை நிகரிடு புலமையு மலமல
முருவு மிளமையு மலமலம் விபரித
சமய கலைகளு மலமல மலமரும் வினைவாழ்வுஞ்
சலிய லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமர பரிபுர சரணமு மவுனமு மருள்வாயே
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
யிருகு தையுமுடி தமனிய தநுவுட
னுருளை யிருசுடர் வலவனு மயனென மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
உடைய வொருவரு மிருவரு மருள்பெற வொருகோடி
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன புகைவன
திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு முனிவார்தஞ்
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
சிகரி மிசையொரு கலபியி லுலவிய பெருமாளே.