உன்னுடைய அருளைத் தந்தருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் விருத்தாசலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் நான்கு நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் பயில்கின்றன.
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த தனதான
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி யுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர்விர்த்த கிரியுற்ற பெருமாளே.