‘என்னைத் தழுவியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் நாயகி பாவத்தில் இயற்றப்பட்டது. பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) இடையின மெய்யும்; இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்திருக்கின்றன.
தய்யதன தானத் தனதானா
துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே
செய்யகும ரேசத் திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே.