‘உன்னைத் தமிழால் பாட அருளவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவாலங்காடு தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த தனதான
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன் கோட்டி விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி வுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவந் தீர்த்து னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொ டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர் புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
யெதிர்பொரு சூரன் தாக்க வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
யிமையவ ரேதந் தீர்த்த பெருமாளே.