‘துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் காத்து அருளவேண்டும்’ என்று வேண்டும் இந்தப் பாடல் விருத்தாசலத்துக்கு உரியது.
குறுவண்ணம் என்னும் வகையில் அனைத்தும் குற்றெழுத்துக்களாலேயே அமைந்திருக்கின்ற இந்தப் பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள் உள்ளன. ஒன்று முதல் ஆறுவரையிலான எல்லாச் சீர்களிலும் சம அளவில் நான்கு நான்கு குற்றெழுத்துகள் பயில்கின்றன.
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமுன மருளிய குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிட விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில லவர்களி
னுறுபட ருறுமெனை யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை முனிவோனே
முடியவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு பெருமாளே.