‘அடியேனுக்கு ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோருகிற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.
தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த தனதான
வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு
வீரமுனை யீட்டி விழியார்தம்
வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்
வீழுமயல் தீட்டி யுழலாதே
ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை
யாவலுட னீட்டி யழியாதே
ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி
யானநிலை காட்டி யருள்வாயே
கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்
கேள்சுருதி நாட்டி லுறைவோனே
கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு
கீரரியல் கேட்ட க்ருபைவேளே
சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி
சீதவிரு கோட்டி லணைவோனே
சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி
தேவர்சிறை மீட்ட பெருமாளே.