‘என் மனம் ஒடுங்குவதான மனோலயத்தை என்று பெறுவேன்’ என்று கேட்கும் இப்பாடல் திருவானைக்காவுக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல். எல்லாச் சீர்களிலும் சம அளவில் மூன்று மூன்று எழுத்துகள் பயின்று வந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒரு வேறுபாடு அமைந்திருக்கிறது. ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன தந்ததான
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென நெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென நைந்துசீவன்
குறைந்தி தப்படி வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை யிட்டுடை சோராவி டாயில மைந்துநாபி
குடைந்து ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னேலய மென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மனங்க ளித்திட லாமோது ரோகித முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோகெ டாதினி
வரும்ப டிக்குரை யாய்பார் பலாகவ மென்றுபேசி
அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் மைந்தனான
அநங்கன் மைத்துன வேளேக லாபியின்
விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய
னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் தம்பிரானே.