‘உன் வலிமையை என்றும் மறவேன்’ என்று நன்றி பாராட்டுகிற இப்பாடல் விராலி மலைக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்திருக்கின்றன.
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன தனதான
காமாத்திர மாகி யிளைஞர்கள்
வாழ்நாட்கொடு போகி யழகிய
காதாட்டிய பார இருகுழை யளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனி
லார்வாட்கடை யீடு கனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை யமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்து
நீலோற்பல ஆசில் மலருட
னேராட்டவி நோத மிடும்விழி மடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளற
நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே
சீமாட்டியு மாய திரிபுரை
காலாக்கிரி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி புவநேசை
சீகார்த்திகை யாய அறுவகை
மாதாக்கள்கு மார னெனவெகு
சீராட்டொடு பேண வடதிசை கயிலாசக்
கோமாற்குப தேச முபநிட
வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி யெனவரு மிளையோனே
கோடாச்சிவ பூஜை பவுருஷ
மாறாக்கொடை நாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை பெருமாளே.