சியாமா சாஸ்திரிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்தார்.
சியாம கிருஷ்ணன் இளமை முதல் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.
இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத சுவாமிகள் என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார்.
சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். சில உருப்படிகளை தமிழில் செய்தார்.
இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார்