மார்ச் 21- உலக வன தினம் இன்று!
By DIN | Published on : 21st March 2017 12:00 AM | அ+அ அ- |

உலகில் பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.
பொதுவாக மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.
காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன.
நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.