கடந்த 1957 முதல் 2016 வரை 13 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த கருணாநிதி ஒரேயெரு முறை மட்டும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்துள்ளார்.
1980 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ் இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 1984 அக்டோபர் மாதம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும், சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நிலை குன்றியிருந்த எம்ஜியாருக்கு ஆதரவாக எழுந்த அனுதாப அலையும், இக்கூட்டணியை பலம் பெறச் செய்தன.
தமிழ்நாட்டின் 8-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் 1984-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் அஇஅதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, அக்கட்சித் தலைவர் எம்ஜிஆர் 3-ஆவது முறையாக தமிழக முதல்வரானார். மேலும் 1987-ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறையும் வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார். மேலும் இதுவே அவரது கடைசி சட்டப்பேரவைத் தேர்தலாகவும் அமைந்தது.
இந்நிலையில், 1983-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு மேலவை உறுப்பினராகி இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதி, 1984 சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தாலும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.